Thursday, November 6, 2008

மேகம் நீங்கிய மழைத்துளி

மேகம் நீங்கிய
மழைத்துளி ஒன்று
பயணிக்கிறது
செம்புலம் நோக்கி

திசைகளற்ற பயணம்
இன்னும் நீட்டிக்கிறது
தூரத்தின் நீளத்தை

அலைக்கழிக்கும் காற்று
கேள்விக்குறிகளாக்குகிறது
சென்று சேர்வதற்கான
மழைத்துளியின்
நம்பிக்கையை

தனிமையின் துயரம்...
விரக்தியின் விளிம்பில்
கண்ணீர் சிந்துகிறது
மழைத்துளி

கண்ணீர்த்துளி
மழைத்துளியின்
சுயத்தின்
பிரதிபலிப்பு

இப்போது
மழைத்துளிக்கு
ஆதரவாய்
கண்ணீர்த்துளி

தனிமை தொலைந்த பயணம்
தூரத்தின் நீளத்தை
அர்த்தமற்றதாக்குகிறது

துளிகளில்
துளிர்க்கிறது
நம்பிக்கை
தூரத்தில் தெரிகிறது
செம்புலம்.
-Boo

Monday, November 3, 2008

வனவாசம்

பகல் முழுதும் அலைந்து திரிந்து
இரவு தாமதித்து வீடு சேர்ந்தனர்
ராமனும், லக்ஷ்மனும், சீதா தேவியும்.

களைப்பின் மிகுதியில் ராமன்
கயிற்றுக்கட்டிலில் சயநித்திருக்க...

அரிசி களைந்து
அடுப்பில் இட்டுக்கொண்டிருந்த
சீதாவின் கண்களில் புகைக்கண்ணீர்.

இன்றைய வருமானம்
இந்த வாரத்தின் மிகக் குறைவென
மழையையும் ராமனையும்
அலுத்துக்கொண்டிருந்தான்
லக்ஷ்மணன்.

உதவும் அணில்கள் அற்ற
கடற்கரை சேரியின் உப்புக்காற்றில்
நைந்துபோன கட்டிலின் நைலான் கயிறு,
காலையில் பூசிய நீல வர்ணத்தை அழித்து,
நாளை பற்றிய கவலைகளோடு
தூங்கிக் கொண்டிருந்த ராமனின் முதுகில்
கோடு கிழித்துக்கொண்டிருந்தது...

-Boo

Friday, September 12, 2008

என்னவள் சமைக்கிறாள்

என்னவள் சமைக்கிறாள்.
வெளியே மழை.
இரண்டிலும்
மண் வாசனை.
-Boo

Thursday, August 28, 2008

சுட்டெரிக்கும் வெய்யில்

சுட்டெரிக்கும் வெய்யில்
முகத்திலறையும் புழுதிக்காற்று
பழகிவிட்ட வியர்வை வாசனை
பக்கத்து டீக்கடையின்
குத்துப்பாடல்
சுவரோர எச்சில் கறைகள்
காதல் கிறுக்கல்கள்
லேகிய வியாபாரிகள்
காய்கறி கூடைகள்
புத்தகச்சுமைகள்
பரீட்சை பயங்கள்
கடிகார கேள்விகள்
இன்டர்வியு அவசரங்கள்
வழித்தட விசாரணைகள்
விழிப்பரிமாற்றங்கள்
குழந்தைகள் தொலைத்துவிட்ட
ரூபாய் நாணயங்கள்
திருட்டுப்போன சம்பள கவர்கள்...
சுவாரஸ்யமாகத்தான் உள்ளன
நகரப் பேருந்திற்கான
காத்திருப்புகள்...
-Boo

Monday, August 11, 2008

தலையணை நனைய

தலையணை நனைய
முகம் பொத்தி
இரவு முழுக்க
அழுத கண்ணீர்
இன்னும் கரித்துக்கொண்டிருக்கிறது
நினைவுகளாய்...

அத்தனை அழுதும்
அடம்பிடித்தும்
அப்பாவிடமிருந்து
பணம் கிடைக்கவில்லை
பேனா வாங்க.

சின்னு வாங்கின பேனாவை
ஆசையாய் வாங்கி
கணக்கு நோட்டில்
முதன்முதலாய் கிறுக்கினபோது
உணர்ந்த அழுத்தம்
ஸ்பரிசித்துக் கொண்டிருந்தது
விரல்களினூடே.

வெள்ளிக்கிழமை
வாங்கித்தருவதாய்
இப்பவும் சொல்லிக்கொண்டிருக்கிறார் அப்பா.
இன்னும் மூன்று நாட்கள்.

வகுப்பில் எல்லோரும்
பேனா வாங்கிவிட
என் விரல்கள் மட்டும்
பென்சில் பிடித்து
வீட்டுப்பாடம் எழுத
மறுத்துக்கொண்டிருந்தன.

வியாழக்கிழமை இரவு
தாமதித்து வீடு வந்த
அப்பாவின் முகத்தில்
படர்ந்திருந்த வெறுமை
எனைப் பார்த்து
இன்றும்
பேனா வாங்க மறந்ததாய்
மௌனித்து நின்றது.

எதுவும் பேசாமல்
தலையணையில்
முகம் பொத்தி
அழுத கண்ணீர் இன்னும்...

காலையில்
வீட்டுப்பாடம் எழுத
பென்சில் தேடியபோது
என் கண்ணிர்க் கறை படிந்த
கன்னங்கள் பார்த்து
பரிகசித்து
சிரித்துக்கொண்டிருந்தது,
ஒரு நாள் இரவு முழுதும்
என்னை அழவைத்த
எனதே எனதான
புதிய பேனா!
அருகில்
புன்னகையுடன் அப்பா!!!

பேனாவில்
மை நிரப்பிகொடுத்த
அப்பாவிடம்
அதே கணக்கு நோட்டில்
மென்மையாய்
அவரின் பெயரை
எழுதிக்காண்பித்துவிட்டு

வெள்ளை சட்டைப்பையில்
புதிய பேனாவை
வைத்துக்கொண்டு
வகுப்பில்
அத்தனை பேரிடமும்
காட்டியே தீரவேண்டிய ஆவலில்
மூச்சிரைக்க ஓடி வந்து
பள்ளி நுழைகையில்

இதயத்துடிப்பை
சில கணங்கள் நிறுத்தி,
என் வெள்ளை சட்டையில்
மை கறையை மட்டும் விட்டுவிட்டு
எங்கேயோ மறைந்துபோன
எனதருமை பேனாவை
இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன்...

-Boo

Sunday, August 10, 2008

கடிதங்கள்

பிள்ளையார் சுழிகள்
சிவமயங்கள்
முனை சந்தனங்கள்
முத்தக்கறைகள்
மைத்தீற்றல்கள்
கண்ணீர் தடையங்கள்
கைரேகைகள்
அடித்தல் திருத்தல்கள்
எச்சில் நனைத்த
அஞ்சல் தலைகள்
அத்தனையும் இழந்து
இறந்துபோய் வருகின்றன
இன்றைய இ-மெயில்கள்.
-Boo

Saturday, August 2, 2008

நீயும் நானும்

வெள்ளிக்கிழமை
கோவில் வாசலில்
மாநிறமாய்
சுருள்க்கூந்தலுடன்
மஞ்சள் புடவையில்
உயரமாய் உனது ஒரு அம்மா...

சனிக்கிழமை
காய்கறிக்கடையோரம்
சற்றே பருமனாய்
பெரிய கண்களுடன்
அழுக்கேறிய சிவப்பு புடவையில்
உனது இன்னொரு அம்மா...

ஞாயிறு மாலையில்
கடற்கரையில்
ஒடிசலாய்
குளிர்க்காற்றில் இருமியபடி
மங்கிய கண்களுடன்
வேறொரு அம்மா...

உனது
அத்தனை அம்மாக்களுடனும்
பசியில்
அழுது ஓய்ந்த
கண்ணீர்க்கண்களுடன் நீ...

எனது
கருணை நாணயங்கள்
உன் பசியையும் கண்ணீரையும்
ஒருபோதும்
போக்கப்போவதில்லை என்றறிந்தும்
உனது அம்மாக்களின் தட்டில்
இரண்டு ரூபாய் வீதம்
உனக்காக
ஆறு ரூபாய் இழந்திருக்கும் நான்...

-Boo

Thursday, July 17, 2008

பூனைபோல்

பூனைபோல்
சப்தமற்று
மிக மெதுவாக
என்னில்
கால் பதிக்கிறது
காமம்.

ஆர்ப்பரிக்கும்
கடலலைபோல்,
காமத்தின் கால்தடங்களை
கண நேரமும்
விட்டு வைப்பதில்லை
காதல்!

தோற்றுப்போன காமம்
கரைந்து போன
கால் தடங்களை
விட்டுவிட்டு
கடலில்
கண்ணீர்த் துளிகளை
கலந்துவிட்டுச் சென்றது.
-Boo

Wednesday, July 9, 2008

நிழல் மண்டிக்கிடக்கிறது

நிழல் மண்டிக்கிடக்கிறது.

இலையுதிர்காலத்தில் இலைகளும்,
வசந்தகாலத்தில் பூக்களும்,
வருடம் ஒருமுறை
சிவப்பு ரோஜாக்களுமாய்,

கடந்துசெல்லும் போதெல்லாம்
வாழ்வின் வெறுமையை
அமைதியாக வாசித்துக்கொண்டிருக்கின்றன,

பெயர் பொறித்த கல்லில்
சுய அறிமுகம் செய்துகொள்ளும்
முகம் தெரியாத
கல்லறைகள்.

-Boo

Saturday, July 5, 2008

எனது கேள்விக்கும்

எனது கேள்விக்கும்
உனது பதிலுக்குமான
நீண்ட
மௌனத்தின் பாதையில்
திசைகளற்று
பயணிக்கிறேன்.

எனது
குறுகி நீளும் நிழல்
மறையும் முன்னே
நமை கடந்து சென்ற
மேகம் தூவிய
தூரலில் நனைந்த
உன் இதழ் கொண்டு
குளிர் வார்த்தைகள் தூவி
எனை வரவேற்பாயா?

-Boo

Sunday, June 29, 2008

இரவில்...

இரவில்
விளக்குகள் அணைத்தபின்
உன் பெயரின்
முதலெழுத்து மட்டும் தெரிய
வருகிறது
தொலைபேசி அழைப்பு...

வழக்கம்போல்
இரவின் நீளத்தை
நீட்டிக்கச்சொல்லி
கடிகாரத்திடம் கண்ணசைத்து

அதுவரை
சேமித்துவைத்த
தனிமையை கலைத்துவிட்டு
பேசத்தொடங்குகிறேன்...

உன்
இதழ் மலரும்
வார்த்தைகளை
கேட்காமல்
அதிகநேரம்
இருக்க முடிவதில்லை
அதனால்
அதிகபட்சம்
ஐந்து வார்த்தைகளுக்குள்
பேசி முடித்து
உன் பதிலுக்காக
காத்துக் கிடக்கிறேன்..

உன்
தனிமையும் தூக்கமும்
கலையாதிருக்க
என் வார்த்தைகளில்
அதிகம்
மெல்லினம் கலக்கிறேன்

பல சமயங்களில்
உனது மௌனம் மட்டுமே
உரையாடிக்கொண்டிருக்கிறது
என்னுடைய மெல்லினங்களுடன்...

நம்
காதலை சொல்லும் வார்த்தைகளை
நான் சேமிப்பதே இல்லை.
நீயோ
செலவழிப்பதே இல்லை.

இரவு கடந்து
காலை நெருங்கும்போது
நான்
தீர்ந்து போன
சொற்களோடு
உனக்காக காத்திருக்கிறேன்

கடிகாரம்
எனக்காக
இரண்டு நொடிக்கு ஒருமுறை
நகர்கிறது...

ஒரு
நீண்ட மௌனத்தின்
இடைவெளியில்
விடிகிறது
உன் வெட்கம் தோய்ந்த வார்த்தைகள்.

என் வாழ்வின்
அர்த்தத்தை
மூன்றே வார்த்தைகளில்
மொழி பெயர்க்கிறாய்
நானும் புன்னகையுடன் பதில்கிறேன்
"ஆமாம்...நானும்...."
-Boo

Friday, March 28, 2008

அந்தப் புத்தகங்கள் அனைத்தும்

அந்தப் புத்தகங்கள் அனைத்தும்
கிலோ ஐந்து ரூபாய்க்கு மட்டுமே
விலை போனதாய்
உன் கணவனிடம்
அலுத்துக்கொண்டாய்,
உள்ளிருப்பவை அனைத்தும்
உன்னைபற்றிய
என் கவிதைகள்
என்றறிந்தும்...!

கவனமாய்
சேகரித்திருக்கிறாய்
என் நிழல் கூட இல்லாத
உன் திருமண புகைப்படங்களை.

உறுதிசெய்துகொள்கிறேன்.
உனது எந்தக் குழந்தைக்கும்
எனது பெயரை
வைத்துவிடவில்லை..

நாம் அமர்ந்திருந்த
உனது வரவேற்பறையின்
அமைதியை
ஜன்னல் திரைச்சீலைகள் மட்டுமே
கலைத்துக்கொண்டிருந்தன.

நான் கிளம்பும்முன்
ஏன் தாடி வளர்கிறாய் என்று
எதேச்சையாய் கேட்டாய்...
உள்ளுக்குள் சொல்லிக்கொண்டேன்

அன்று
உன் இதழ் பதித்து
உரமிட்ட
என் கன்னங்கள்
இன்று
அமோகமாய்
தாடி வளர்க்கின்றன.


-Boo

Sunday, March 16, 2008

நெடு நேரமாய்...

நெடு நேரமாய்
எனதருகே அமர்ந்து
கன்னத்தில் கை வைத்தபடி
உன் இதழ் பார்த்து
காத்துக்கிடக்கிறது காற்று

அந்த உறைந்த நொடியில்
உன்
இதழ் விரித்து பதில்கிறாய்
"ஆமாம், நானும் உன்னை..."

இருவரின் சம்மதத்துடன்
கையெழுத்தாகிறது
நமது
விவாகரத்துப் பத்திரம்.

Monday, March 10, 2008

இந்திய சாலைகள்

இந்திய சாலைகள்
குழிகள் நிறைந்திருப்பதாய்
குறைகள் சொல்கிறேன்.

Pizza, Burger என்ன விலை?
எழுதி வைத்துக்கொள்கிறேன்.

தாகம் தீர்க்க
தண்ணீர் விடுத்து
Pepsi, Coke கேட்க
பழகிகொள்கிறேன்.

சாலைகளில் இன்னமும்
வலப்பக்கம் செல்லவே தோன்றுவதாய்
அலட்டிக்கொள்கிறேன்.

எங்கும்
தனித்து நின்றாலும் கூட
வரிசையில் நிற்கிறேன்.

வெளியே செல்லும்முன்
வானிலை அறிகிறேன்
உச்சி வெய்யிலிலும்
Jerkin அணிகிறேன்.

ஒரு ரூபாய் சீப்புக்கும்
Deals பார்க்கிறேன்.
தெருமுனை
காய்கறிகாரியிடம் கூட
Sell by date கேட்கிறேன்.

இன்னும்
killometer மறந்து
Mile பழக வேண்டும்.
Petrol விடுத்து
Gas கேட்க வேண்டும்.
எதிரில் யாரேனும் வந்தால்
பத்து Degree யாவது
புன்னகைக்க வேண்டும்.

அடுத்த மாதம் கல்யாணம்.
அமெரிக்காவில்
வேலை பார்ப்பதாய்
பெண் வீட்டாரிடம்
பொய் சொல்லியிருக்கிறேன்.

Sunday, March 2, 2008

பால்ய காலத்து சிநேகிதன்

பால்ய காலத்து சிநேகிதன்
எதிர் வந்த பேருந்தின்
முன் இருக்கையில்,
என்னைப் போலவே.

இருவர் முகத்திலும்
பரவச அலைகள்.

அடுத்த கணம்
அவனுக்கு மிக அருகில் நான்.

அவனும் இறந்து கொண்டிருந்தான்
என்னைப் போலவே.

நான் அவளைக் காதலித்தேன்

நான் அவளைக் காதலித்தேன்
அவளும் என்னைக் காதலித்தாள்
இருவரும் சொர்க்கம் கண்டோம்.
இன்று எங்களுக்கு
ஆறாவது நினைவு தினம்.

Saturday, March 1, 2008

பறந்து பறந்து

பறந்து பறந்து
முளைத்த சிறகுகளும்
முறிந்து போயின.

பால் மறந்த மார்புகள்
இப்போதெல்லாம்
இரத்தம் தர பழகிக்கொன்டன.

மொக்குகள் மலராதிருக்க
காற்றே கைவிலங்கிட்டிருக்கிறது.

என் வெற்றிச் சிறுகதை
தலைப்புடனே
முடிந்து போயிற்று.

ஆனாலும்,
உயிர்த்திருக்கிறது
என் முயற்சி மட்டும்.

என்
முறிந்த சிறகை மீறிய
வானம் கடந்து
திரும்பிப் பார்க்கையில்...
அட!
நட்சத்திரங்களுக்கு நடுவில் நான்!

Sunday, February 24, 2008

மழை முடிந்த...

மழை முடிந்த மாலை நேரம்
என் இதயம் நனைக்கும் தென்றலில்
கையில் சிவப்பு ரோஜாக்களுடன்
உனக்காக காத்திருக்கிறேன்.

காற்றில் அலைந்தபடி விழுகிறது
ஒற்றை இலை
உனது கல்லறை மீது.

இன்னும் தூறல் நிற்கவில்லை
எனது நம்பிக்கை போலவே.

ஏதோ நடக்கப்போவதாய்...

ஏதோ நடக்கப்போவதாய் உணர்ந்தேன்.
என் மீசை துடித்தது.
இமைகள் படபடத்தன.
இதயம் கணமானது.
ஜன்னல் கதவுகள்
அறைந்து கொண்டன.
காற்று சுழன்றடித்தது.
மேகங்கள் திரண்டன.
வானம் இருண்டது.
அடுக்களையில்
என்னவள்
சமைக்க அரம்பித்திருக்கிறாள்,
முதன் முறையாய்... :)

Monday, February 18, 2008

உன் கூந்தல் கலைக்கப்படுகிறது...

உன் கூந்தல்
கலைக்கப்படுகிறது...
நீ சூடிய பூக்கள்
உதிர்க்கப்படுகின்றன...
உன் சேலையும் நழுவுகிறது...
நீயும்
எதிர்க்க முடியாமல்
தோற்றுப்போகிறாய்.
பலமாக வீசுகிறது காற்று!

Sunday, February 10, 2008

பிழைப்பு

சிவந்துவிடாதிருக்க
நான்
மஞ்சளிட்டுக்கொள்கிறேன்...

என் இதழ்களை
ஈரமாக்கிக்கொள்கிறேன்...

எனது கண்களில்
மையிட்டுக்கொள்கிறேன்...

கதவின் ஓசை கேட்டு
மிரண்ட வெட்கத்தை
கண்மூடி இருக்கச் சொல்லிவிட்டு
முதன் முறையாய் தாழ் திறக்கிறேன்.
வெளியே...யாரோ!

இரண்டு சாமம் முடிந்து
மூன்றாவதாய் கதவு திறக்கையில்
வெட்கம்
இருட்டறையின் மூலையில்
கண்ணீர் கறையுடன்
உறங்கிவிட்டிருந்தது...

மீண்டும் நினைவுபடுத்திக்கொள்கிறேன்
காலையில் வீடு திரும்புகையில்
இனிப்பு வாங்கிச் செல்லவேண்டும்!
தலைக்கு நானூறு வீதம்
நேற்று இரவு
எனது முதல் நாள் சம்பளம்
ஆயிரத்து இருநூறு ரூபாய்...!

எனக்கான காத்திருப்பில்...

எனக்கான காத்திருப்பில்
உன் கன்னம் கடந்தக் கண்ணீர்
நம் காதலின்
பாரம் சுமந்து
பூக்களின் மீது விழும்போது
எழுந்த காற்று
தூரத்தில் என்னிடம்
உனது தனிமையை
அழுதுவிட்டுச் சென்றது...

மழைத்துளி விழுந்தாலும்
வாசம் தராத
போர்க்களத்தின் பாசறையில்
கறை படிந்த வாட்களோடும்
தீர்ந்து போன
உன் வாசத்தோடும்
சுகித்திருக்கிறேன்...

உன் தனிமையும்
கண்ணீரும்
தீரும்முன்
உன் கூந்தலில் சூட
வாகையோடு வருகிறேன்...

அதுவரை
தேயும் நிலவினை விடுத்து
கண்ணே
நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டு இரு!

எப்படி அறிகிறாய்...

எப்படி அறிகிறாய்
எனது வருகையை?
வாசல் நுழையும் முன்னே
கதவு திறக்கிறாயே?

எப்படி அறிகிறாய்
எனது பசியை?
சமையலறை நுழையும் முன்பே
சகலமும் தயாராய்!

எப்படி அறிகிறாய்
எனது கவலைகளை?
தொலைபேசியில் தயாராய்
உன் ஆறுதல் வார்த்தைகள்!

எனது சந்தோசங்களையும்
நான் சொல்லும் முன்பே
உன் அன்பு முத்தங்களுடன்
பகிர்ந்து கொள்கிறாய்!

நாம் பேசும்போதெல்லாம்
என் இதயம் கடக்கும் முன்பே
என் வார்த்தைகள்
உன் இதழ் கடக்கின்றன!

உன் மீதான
என் கோபங்களை
ஆறுதல்படுத்தி
என்னிடமிருந்து வழியனுப்பும்
உன் விழிகள்!

நம் கனவுகளில் கூட
எப்போதுமே நாம்!

எப்படி மறந்தாய்
இப்போது மட்டும்?
உன் நரைத்த முடி காற்றில் ஆட...
உன் சுருக்கம் விழுந்த கைகள்
என் கைகளை பற்றி இருக்க...
உன் புன்னகை முகமும்
எனை பார்த்தபடி இருக்க...
நீ இறந்து
இரண்டு வினாடிகள் ஆயிற்று!

மழை பெய்துகொண்டிருக்கிறது...

மழை பெய்துகொண்டிருக்கிறது...

வீட்டு முற்றத்தில் நின்றுகொண்டு
அரைகுறையாய் நனைந்தபடி
காகிதப் படகுகள் செய்து
அவைகளுக்கு
வெள்ளத்தில்
நீந்த கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்...

இரண்டு வீடுகள் தள்ளி
உன்மேல் பட்டுத் தெறிக்கும்
மழைத் துளிகளை ரசித்துக்கொண்டே
நீந்தி வரும்
காதல் கடிதங்களை
சேமித்தபடி நான்...!

ஆடைகள் வேண்டி...

ஆடைகள் வேண்டி
வானம் நோக்கி தவம் செய்கின்றன
முன்பனி காலத்து
நிர்வாண மரங்கள்...

பனிக்காலத்து இரவுகளில்
வெட்கம் பூசிய உன் கண்கள்
என்னை நோக்கி தவம் செய்கின்றன
என்னையே வேண்டி...

மகிழ்ந்த வானம்
பனியால் மூடத்தொடங்குதிறது
மரங்களை...

நானும்...

அரங்கமே...

அரங்கமே
என் சிதார் இசையைக் கேட்க
காத்துக்கொண்டிருக்கிறது…

என் சிதாரின்
ராகமாலிகையோ
உன் கொலுசொலியை கேட்டு
உன் காலடியிலேயே
மயங்கிக்கிடக்கிறது…

நான்
இதழ்களால்
உனை கெஞ்சுகிறேன்...
நீ
இமைகளால் புன்னகைக்கிறாய்...

என் சிதார்
இசைக்கத் தொடங்குகிறது...

சிதார் இசை...

சிதார் இசை கேட்கும் போதெல்லாம்
உன்னை பார்க்கிறேன் நான்...

நான் உன்னை பார்க்கும் போதெல்லாம்
நிலம் பார்க்கிறாய் நீ...

நீ என்னைப் பார்க்கும் போதெலாம்
என் இதயம்
சிதார் இசைக்கத் தொடங்கிவிடுகிறது...

இப்படியே
முடிவிலியாக போய்க்கொண்டிருக்கிறது
உன் வெட்கமும்
நம் காதலும்...

அந்த அழகான ஓவியங்களுக்கு...

அந்த அழகான ஓவியங்களுக்கு
என்ன பெயர் வைக்கலாம் என்று
யோசித்து கொண்டிருக்கும்போதே

கடல் அலை ஒன்று
என் அனுமதி இல்லாமல்
அபகறித்துச் சென்றது
உன் கால் தடங்களை...

கோபித்த என்னிடம்
கூறிவிட்டுச் சென்றது...

இனிமேல்
உன் கால் தடங்கள் இல்லாத
கடற்கரைக்கு
அவை வருவதில்லையாம்!

வழக்கம்போல...

Comment from my friend for the previous poem:
நல்ல கவிதை...
Suggesstion: தென்றலை தவிர்க்க எதாவது கண்ணாடி கூண்டில் அடைத்து வைக்கவும் :)...
அதற்கு பதில், கீழே

வழக்கம்போல
உன்னை சந்திக்க வந்திருக்கிறது
வண்ணத்துப்பூச்சி ஒன்று...

கூண்டிற்கு வெளியே
அதன் சிறகுகளும்...
உள்ளே
உனது விழிகளும்...
படபடத்துக் கொண்டிருக்கின்றன!

அழகே...
நீயே சொல்
யாரை அனுமதிப்பதென்று...
தென்றலயா?...வண்ணத்துப் பூச்சியையா?

குல்மொகர் மலர்கள்...

குல்மொகர் மலர்கள் நிறைந்த சாலையில்
நீ நடந்து செல்கிறாய்...

மரத்தினின்றும் உதிரும்
அந்த செந்நிற மலர்கள்
உன்னை காயப்படுத்தி விடக்கூடாதென்று
பின்னால் குடையுடன் நான்!

அடீ, என் மெல்லுடல் காதலீ...
உன்னில் மோதிச் செல்லும்
இந்த தென்றலைத்தான்
என்ன செய்வதென்றுபுரியவில்லை!

மெதுவாகத்தான் வீசுகிறது காற்று

மெதுவாகத்தான் வீசுகிறது காற்று
ஆனாலும்
இலைகளால் இருக்க முடிவதில்லை.

என் கனிந்த இதயத்தை போலவே
உன் பார்வை பட்டதும்
உதிர்ந்து விடுகின்றன.

இலைகளிழந்து நிற்கிற
எனை பார்த்து
கை கொட்டி சிரிக்கின்றன
உனது விழிகள்
இது வசந்த காலமென்று!

My First Blog

Krishna!