Friday, July 31, 2009

உடைந்து உருவிழந்து

உடைந்து
உருவிழந்து
உன்னைத் தழுவி
மோட்சம் பெறுவதற்காய்
உனதிலைகளின் மீது
விழுந்த என்னை

நீ
வளைந்து
நிலம் நோக்கி
வீழச்செய்தாய்..

இந்த மழைத்துளி
இலைகளின் மேல்
தவம் செய்ய
வரம் வாங்கி
வரவில்லை போலும்
என்றெண்ணி

கண்ணீர் மல்கி
மண்ணைச் சேர்ந்து
நான் மரணிக்கும் போது
உன் வேர்களால்
எனைத் தீண்டி
என் உயிர் மீட்டாய்.

இலைகளில்
வாழ்வதல்ல;
உயிரின்
வேர்களில் வீழ்வதே காதல்
என்றுரைத்தாய்.

நீ என் காதலி!

-Boo