Wednesday, February 1, 2012

கடைசியாக ஒருமுறை

கடைசியாக ஒருமுறை
கடற்கரையில் சந்தித்துவிட்டு
நிரந்தரமாக பிரிவதென்று தீர்மானித்தோம்.

நிலவுமற்ற இருளில்
ஈரமில்லா மணலில்
முகம் சுழிக்காத இடைவெளியில் அமர்ந்தோம்.

நம்முடன் சேர்ந்து
அலைகளும் அமைதியாக இருந்தன.

நான் பேச எத்தனித்த
மௌனத்திற்கு மிக அருகேயான
முதல் வார்த்தை
காற்றில் கரைந்து போயிற்று.

அதுவரை அமைதியாக இருந்த அலை
நீ பேச ஆரம்பித்தபோது
ஆர்ப்பரித்து அடங்கியது.

மௌனத்தின் விளிம்பில்
தடுமாறிய வார்த்தைகள்
நம் உறவின் எஞ்சிய ஈரத்தில்
நம்மை நனைத்துக்கொண்டிருந்தன.

பிரிவின்
முதல் புள்ளியில்
புரிதலும் தொடங்கியது.

மிக நெருக்கமான கால்த்தடங்களை
கரையில் விட்டுவிட்டு,
ஒரே குடையில் நடக்க ஆரம்பித்தோம்.

மழை தொடங்கியது.
-Boo

வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறேன்...

வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறேன்...
நீ இல்லாத வெற்றிடத்தினை
என் கண்ணீரால் நிரப்பிக்கொண்டு.
-Boo