இரவில்
விளக்குகள் அணைத்தபின்
உன் பெயரின்
முதலெழுத்து மட்டும் தெரிய
வருகிறது
தொலைபேசி அழைப்பு...
வழக்கம்போல்
இரவின் நீளத்தை
நீட்டிக்கச்சொல்லி
கடிகாரத்திடம் கண்ணசைத்து
அதுவரை
சேமித்துவைத்த
தனிமையை கலைத்துவிட்டு
பேசத்தொடங்குகிறேன்...
உன்
இதழ் மலரும்
வார்த்தைகளை
கேட்காமல்
அதிகநேரம்
இருக்க முடிவதில்லை
அதனால்
அதிகபட்சம்
ஐந்து வார்த்தைகளுக்குள்
பேசி முடித்து
உன் பதிலுக்காக
காத்துக் கிடக்கிறேன்..
உன்
தனிமையும் தூக்கமும்
கலையாதிருக்க
என் வார்த்தைகளில்
அதிகம்
மெல்லினம் கலக்கிறேன்
பல சமயங்களில்
உனது மௌனம் மட்டுமே
உரையாடிக்கொண்டிருக்கிறது
என்னுடைய மெல்லினங்களுடன்...
நம்
காதலை சொல்லும் வார்த்தைகளை
நான் சேமிப்பதே இல்லை.
நீயோ
செலவழிப்பதே இல்லை.
இரவு கடந்து
காலை நெருங்கும்போது
நான்
தீர்ந்து போன
சொற்களோடு
உனக்காக காத்திருக்கிறேன்
கடிகாரம்
எனக்காக
இரண்டு நொடிக்கு ஒருமுறை
நகர்கிறது...
ஒரு
நீண்ட மௌனத்தின்
இடைவெளியில்
விடிகிறது
உன் வெட்கம் தோய்ந்த வார்த்தைகள்.
என் வாழ்வின்
அர்த்தத்தை
மூன்றே வார்த்தைகளில்
மொழி பெயர்க்கிறாய்
நானும் புன்னகையுடன் பதில்கிறேன்
"ஆமாம்...நானும்...."
-Boo
Sunday, June 29, 2008
Subscribe to:
Posts (Atom)