Sunday, August 12, 2012

என் உலகம்


கவலைகளும், அவசரங்களும் அற்றது என் உலகம்.

கனவு கலைத்த
கடிகாரத்தின் தலையிலடித்து
எரிச்சலாய் உறக்கம் கலைக்கத் தேவையில்லை.

அவசரமாய் அருந்திவிட்டு
தேநீரின் சூட்டை
வயிற்றில் உணரத் தேவையில்லை.

தலைப்புச் செய்திகளை மட்டும் மேய்ந்துவிட்டு
தினசரிகளை விசிறியடிக்கத் தேவையில்லை.

முதல் வகுப்புப் பெட்டிகளில் கூட
வியர்வை வாசத்தில் பயணிக்கத் தேவையில்லை.

காதலியிடம் காதல் சொல்ல,
தனிமை தேடாமல்
இரைச்சல் பழகிக்கொள்ளத் தேவையில்லை.

சாலை ஓரத்து இரத்தக் கறையை
கவனிக்காமல் செல்லக்
கற்றுக்கொள்ளத் தேவையில்லை.

ஆனால்,
நகர நரகத்தின் 
அலுவல அவசரத்தில் 
வாழ்வை தொலைத்துக்கொண்டிருக்கும் 
சராசரனின் பட்டியலில் 
என் பெயரும் ஒருநாள் எழுதப்படும்.

அதுவரை,
மாதாமாதம் பத்து தேதிக்குமேல்
அப்பாவிடமிருந்து வரும் கடிதத்தின் 
நலம் விசாரிப்புகளோடும், 
கடிதத்தின் மடிப்புகளிடையே கிடைக்கும்
சில நூறு ரூபாய் தாள்களோடும்,
என் தேவைகளை தீர்த்துக்கொண்டு,

கவலைகளும் அவசரங்களும் அற்று
சற்றே தாமதித்து இயங்கும்
என் உலகத்தில்
வேலை தேடிக்கொண்டு இருக்கப்போகிறேன்.

-Boo