Sunday, February 10, 2008

எப்படி அறிகிறாய்...

எப்படி அறிகிறாய்
எனது வருகையை?
வாசல் நுழையும் முன்னே
கதவு திறக்கிறாயே?

எப்படி அறிகிறாய்
எனது பசியை?
சமையலறை நுழையும் முன்பே
சகலமும் தயாராய்!

எப்படி அறிகிறாய்
எனது கவலைகளை?
தொலைபேசியில் தயாராய்
உன் ஆறுதல் வார்த்தைகள்!

எனது சந்தோசங்களையும்
நான் சொல்லும் முன்பே
உன் அன்பு முத்தங்களுடன்
பகிர்ந்து கொள்கிறாய்!

நாம் பேசும்போதெல்லாம்
என் இதயம் கடக்கும் முன்பே
என் வார்த்தைகள்
உன் இதழ் கடக்கின்றன!

உன் மீதான
என் கோபங்களை
ஆறுதல்படுத்தி
என்னிடமிருந்து வழியனுப்பும்
உன் விழிகள்!

நம் கனவுகளில் கூட
எப்போதுமே நாம்!

எப்படி மறந்தாய்
இப்போது மட்டும்?
உன் நரைத்த முடி காற்றில் ஆட...
உன் சுருக்கம் விழுந்த கைகள்
என் கைகளை பற்றி இருக்க...
உன் புன்னகை முகமும்
எனை பார்த்தபடி இருக்க...
நீ இறந்து
இரண்டு வினாடிகள் ஆயிற்று!

No comments: