Sunday, December 22, 2013

பலி

இறந்தே போனாள்...

செந்திலுக்கு மனைவியானபின்
அவனுக்குப் பிடித்த
வாழ்க்கயை வாழ்வதில்
தன் சுயத்தை
தொலைத்துவிட்டிருந்தக் கஸ்தூரி
ஒருநாள்...

-Boo

Tuesday, September 10, 2013

ஞானம்

பரிசுச் சீட்டில்
வெற்றி பெற்ற எண்ணின் 
பத்து இலக்கங்கள் 
ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டபோது 
இரண்டாம் இலக்கத்தில் 
சீட்டைக் கசக்கிய 
எனதருகில் இருந்தவரைவிட 
ஐந்தாம் இலக்கத்தில் 
பரிசினை இழந்த நான் 
அதிர்ஷ்டம் அதிகம் உடையவனாய் உணர்ந்து  
அடுத்த குலுக்கலுக்குச் சீட்டு வாங்க
ஆயத்தமானேன்.

- Boo

Friday, October 5, 2012

மரணத்தின் விளிம்பில் ஒரு வேண்டுகோள்


அனுப்புனர்:
குடைக்கம்பியின் மழைத்துளி.
 
பெறுனர்:
குடை உரிமையாளர்.
 
வேண்டுகோள்:
சிலிர்க்கும் மழையை மறுத்து
கறுப்புக் குடைக்குள் நடந்தீர்.
வீடு நுழைகையில்
குடையை உதறி
என் நெடிப்பொழுது வாழ்வை
உங்கள் மிதியடிகளில்
முடித்துவிடாதீர்.
தன் ஆயுள் முழுதும்
எங்களோடு கழிக்கும்
குடையோடு
நான் மரிக்க விரும்புகிறேன்.
உதறாமல் செய்வீரா?

-Boo

Thursday, September 13, 2012

ஞாபக மிட்டாய்


அரைகுறை வெளிச்சத்தில்
கண்ணாடிப் பெட்டிக்குள் அடுக்கி இருந்ததில்  
ஏதோ ஒன்றைக் காட்டி
மழழையில் சிணுங்கிய சிறுவனுக்கு
விலை ஏதும் கேட்காமல்
அந்த அப்பா வாங்கிக்குடுத்த 
பொம்மைப்படம் போட்டக் கடிகாரம்,

பீப்பி ஊதிக்கொண்டு
மதிய நேரத்தில்
எங்கள் வீடு கடக்கும் மிட்டாய்க்காரர்,
மூங்கில் கழியின் உச்சியில்
அழுக்குப் பாவாடை அணிந்த
கண்கள் சிமிட்டும் பொம்மைக்குக் கீழே
வெள்ளை-சிவப்பு வர்ணத்தில்
பிசுபிசுக்கும் மிட்டாயில் செய்து
என் வலக்கையில் ஒட்டிவிட்டுப்போன  
அந்த கடிகாரத்தைப் போல்
வருடங்கள் பல கழித்தும்
இனித்துக் கொண்டிருக்குமா?
தெரியவில்லை!

-Boo

Sunday, August 12, 2012

என் உலகம்


கவலைகளும், அவசரங்களும் அற்றது என் உலகம்.

கனவு கலைத்த
கடிகாரத்தின் தலையிலடித்து
எரிச்சலாய் உறக்கம் கலைக்கத் தேவையில்லை.

அவசரமாய் அருந்திவிட்டு
தேநீரின் சூட்டை
வயிற்றில் உணரத் தேவையில்லை.

தலைப்புச் செய்திகளை மட்டும் மேய்ந்துவிட்டு
தினசரிகளை விசிறியடிக்கத் தேவையில்லை.

முதல் வகுப்புப் பெட்டிகளில் கூட
வியர்வை வாசத்தில் பயணிக்கத் தேவையில்லை.

காதலியிடம் காதல் சொல்ல,
தனிமை தேடாமல்
இரைச்சல் பழகிக்கொள்ளத் தேவையில்லை.

சாலை ஓரத்து இரத்தக் கறையை
கவனிக்காமல் செல்லக்
கற்றுக்கொள்ளத் தேவையில்லை.

ஆனால்,
நகர நரகத்தின் 
அலுவல அவசரத்தில் 
வாழ்வை தொலைத்துக்கொண்டிருக்கும் 
சராசரனின் பட்டியலில் 
என் பெயரும் ஒருநாள் எழுதப்படும்.

அதுவரை,
மாதாமாதம் பத்து தேதிக்குமேல்
அப்பாவிடமிருந்து வரும் கடிதத்தின் 
நலம் விசாரிப்புகளோடும், 
கடிதத்தின் மடிப்புகளிடையே கிடைக்கும்
சில நூறு ரூபாய் தாள்களோடும்,
என் தேவைகளை தீர்த்துக்கொண்டு,

கவலைகளும் அவசரங்களும் அற்று
சற்றே தாமதித்து இயங்கும்
என் உலகத்தில்
வேலை தேடிக்கொண்டு இருக்கப்போகிறேன்.

-Boo 



Tuesday, July 17, 2012

எனக்கு அழுவது மிகப்பிடிக்கும்

எனக்கு அழுவது மிகப்பிடிக்கும்.

ஒருபோதும் தனிமையில் அழுவதில்லை நான்!
என்னுடன் எப்போதுமே அழுகின்றன,
வலிமையின் முன் என் இயலாமையும்,
நம்பிக்கையின் முன் என் ஏமாற்றமும்,
வெற்றியின் முன் என் அவமானமும்,
இன்பத்தின் முன் என் வெறுமையும்,
இருளில் எனைச்சுற்றி நிறைந்திருக்கும்
என் நிழலும்.

கண்ணீர் காய்ந்து போனாலும் 
அது விதைத்து விட்டுச்செல்லும் கசப்பினோடு,
யாருமில்லா கடற்கரையில்  
உப்புக்காற்றின் துவர்ப்பினையும் சுவைத்தபடி,
அழுவது எனக்கு மிகப்பிடிக்கும்.   

- Boo








Tuesday, June 26, 2012

ரணம்

உறவுப் பின்னலில் 
ஒற்றை இழைகள்!
சாயம் போனதுபற்றி
கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன்,
அறுந்துபோனது தெரியாமல். :(

-Boo 

Friday, April 20, 2012

பிரிவாற்றாமை

நீ ஒன்றும்
பெரிதாய் சாதித்துவிடவில்லை
என் நெஞ்சில் கொஞ்சம் வலியும்,
என் கண்களில்
துளி கண்ணீரும் வரவழைத்தது தவிர.

உன்னுடன்
என் சின்னஞ்சிறு
புன்னகை மட்டும்தானே சென்றது?
நான் இன்னும் வாழ்ந்துகொண்டுதான்  இருக்கிறேன்!

இப்பொழுதெல்லாம்
யோசிக்க நிறைய நேரம் கிடைகிறது
மிகுந்திருக்கும் பொழுதுகளை என்ன செய்வதென்று.

அலுவலகம் செல்லும்முன்
அத்தனை முறை
கையசைத்து, முத்தங்கள் அனுப்பி,
உன்னைப்போல் யாரும்
என் நேரத்தை வீணடிப்பதில்லை.

மணிக்கொருதரம்
உன் செல்லப் பெயர் காட்டி அழைக்கும் தொலைபேசி 
இப்பொழுதெல்லாம் தொந்தரவின்றி துயில்கிறது.

நம் பிரிவின் கடைசி நொடியில்
நாம் இன்னும் இரண்டு வார்த்தைகள் 
அதிகம் பேசி இருக்கலாமோ?
அந்த நேரத்திலா
வார்த்தைகள் தொலைந்து போக வேண்டும்?

என் சட்டையில் உன் முத்தச்சாயம்,
என் மார்பில் உன் கீறல் கிறுக்கல்கள்,
இப்படி எதையுமே சேமிக்காமல்
உன் நினைவுகளோடு மட்டுமே
வாழும் என்னை,கண்ணே....
மீண்டும் எப்போது வந்து உயிர்த்தெழுப்புவாய்?
-Boo

Wednesday, February 1, 2012

கடைசியாக ஒருமுறை

கடைசியாக ஒருமுறை
கடற்கரையில் சந்தித்துவிட்டு
நிரந்தரமாக பிரிவதென்று தீர்மானித்தோம்.

நிலவுமற்ற இருளில்
ஈரமில்லா மணலில்
முகம் சுழிக்காத இடைவெளியில் அமர்ந்தோம்.

நம்முடன் சேர்ந்து
அலைகளும் அமைதியாக இருந்தன.

நான் பேச எத்தனித்த
மௌனத்திற்கு மிக அருகேயான
முதல் வார்த்தை
காற்றில் கரைந்து போயிற்று.

அதுவரை அமைதியாக இருந்த அலை
நீ பேச ஆரம்பித்தபோது
ஆர்ப்பரித்து அடங்கியது.

மௌனத்தின் விளிம்பில்
தடுமாறிய வார்த்தைகள்
நம் உறவின் எஞ்சிய ஈரத்தில்
நம்மை நனைத்துக்கொண்டிருந்தன.

பிரிவின்
முதல் புள்ளியில்
புரிதலும் தொடங்கியது.

மிக நெருக்கமான கால்த்தடங்களை
கரையில் விட்டுவிட்டு,
ஒரே குடையில் நடக்க ஆரம்பித்தோம்.

மழை தொடங்கியது.
-Boo

வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறேன்...

வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறேன்...
நீ இல்லாத வெற்றிடத்தினை
என் கண்ணீரால் நிரப்பிக்கொண்டு.
-Boo

Saturday, April 2, 2011

காதலைப்பற்றி...

உன்னைப் பற்றி
கவிதைகள் எதுவும்
எழுதுவதாய் இல்லை
உன்னை காதலிக்கும் வரை
 
உன் கோபங்கள்
என்னை சலனப்படுத்தவில்லை
உன்னை காதலிக்கும் வரை
 
உன் சிரிப்பு
என்னை சந்தோஷிக்கவில்லை
உன்னை காதலிக்கும் வரை
 
உன் வருகையை
நான் எதிர்பார்த்திருக்கவில்லை
உன்னை காதலிக்கும் வரை
 
உன் முத்தங்கள்
எனக்குள் தீ மூட்டவில்லை
உன்னை காதலிக்கும் வரை
 
உன் மோகத்தில்
அமிழ்ந்து புதைந்துவிடவில்லை
உன்னை காதலிக்கும் வரை
 
உன் கூந்தல் அலையில்
மூச்சுத்திணரவில்லை
உன்னை காதலிக்கும் வரை
 
உன் இதழ் ஈரத்தை
ரசித்ததில்லை
உன்னை காதலிக்கும் வரை
 
உன் உப்பிட்ட சமையலை
ருசித்ததில்லை
உன்னை காதலிக்கும் வரை
 
உன் தொடுதலில்
நான் தொலைந்ததில்லை
உன்னை காதலிக்கும் வரை
 
உன் ரேகைகளின் வழியாக
பயணித்ததில்லை
உன்னை காதலிக்கும் வரை
 
உனக்காய்
என் நேரத்தை சேமித்ததில்லை
உன்னை காதலிக்கும் வரை
 
உன் துயரம்
என்னை அழவைத்ததில்லை
உன்னை காதலிக்கும் வரை
 
இன்னும்
எத்தனை எத்தனையோ...
 
நாம்
முட்களை களைந்து
பூக்களை பறித்துக் கொண்டிருக்கிறோம்
 
கீறல்களை மறைத்து
காதல் மலர்கின்றது
 
அந்த
இனிய வாசத்துடன்
காதலே...
உனக்கு
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

-Boo

Sunday, December 19, 2010

மின்சார ரயிலின்

மின்சார ரயிலின்
காலைக் கூட்ட நெரிசலில்
வெண்கலக் குரல் பாடலும்
சில்லறைகள் குலுங்கும் தட்டும்
எனது ஒரு ரூபாயை
எடுக்கத் தீர்மானிப்பதர்க்குள்
கடந்து சென்று விடுகின்றன.

என் பாழும் மனது
அன்று முழுவதும்
அந்தப் பாடலை
பாடிக்கொண்டிருக்கிறது,
சில்லறை சத்தத்துடன்.
-Boo

தனிமை

பிடித்துக்கொள்ள
மனிதர்கள் இல்லாமல்
அலைந்துகொண்டிருக்கின்றன
பின்னிரவின்
மின்சார ரயிலில்
தொங்கும்
கைப்பிடிகள்.
-Boo

கட்சித் தலைவர்களின்

கட்சித் தலைவர்களின்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பொதுக்கூட்ட, மாநாட்டு அழைப்புகள்
மசாலா பொடி விளம்பரங்கள்
திரைப்படங்களின் அமோக வெற்றி
தோழரின் கண்ணீர் அஞ்சலி
தேவனின் வருகை
அத்தனையும் அறிவிக்கும் சுவரில்
இன்னமும் அழியாமல்
'விளம்பரம் செய்யாதே!'
-Boo

தூறலின் துளிகள்

தூறலின் துளிகள்
ஜன்னலில் வரைந்த
நீர்க்கோடுகளை
விரல்களால் தொடர்ந்துகொண்டே
மழைக்கால பேருந்துப்பயணம்...

வழிநெடுக
நீர் நிரம்பிய
குளங்களும் கிணறுகளும்
சிறுவர்களுக்கு
நீச்சல் கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்க

பள்ளியில்
மதிய நேர
கணக்கு வகுப்புகளை மட்டும்
கட் அடித்துவிட்டு
கிணற்றில் ஊறிய ஞாபகம்.

டயர் ட்யூபில்
மிதந்த சிறுவன்
பேருந்தை பார்த்து
டாட்டா காட்டுகிறான்

நினைவுகளில் மிதந்துகொண்டு
நானும்
கையசைக்கிறேன்
அனிச்சையாய்!
-Boo

Tuesday, July 6, 2010

தென்றலில் மயிலிறகுபோல்

தென்றலில் மயிலிறகுபோல்
அசைகிறாய்

என்னை தொட்டுவிடாமல்
உரசிச்செல்லும்
உன் மூக்கின் நுனி

என் வியர்வை துளிகளை
எரித்துக்கொண்டிருக்கும்
உன் மூச்சின் வெப்பம்

உன்னில் உதித்து
என்னில் கடந்து
உன்னிலே முடியும்
இரத்த ஓட்டம்

மங்கி எரியும்
விளக்குகள் நிறைந்த தெருவின்
அமைதியை
சன்னமாக கலைக்கும்
உன் சிணுங்கல்

உன்னில் தொலைத்துக்கொண்டிருக்கிறேன்
என் தனிமை இரவுகளை!!!

Monday, June 7, 2010

நம் முதல் சந்திப்பில்

நம் முதல் சந்திப்பில்
மௌனத்தை மட்டுமே
பரிமாறிக்கொண்டதாய்
நினைத்திருந்தோம்

எனது நினைவுகளுக்கு
எட்டாதபடி
உனது வார்த்தைகள்
என் இதயத்தில்
தந்தியடித்துக்கொண்டிருந்தது
-Boo

Friday, June 4, 2010

புடவை வாங்க

புடவை வாங்க
போனதாய் சொன்னாய்
கடைக்காரன் கண்டிப்பாய்
ஆச்சர்யப்பட்டிருக்க வேண்டும்!
பட்டுப்புடவை கடையில்
வண்ணத்துப்பூச்சி!
-Boo

உன் சிரிப்பினில் சிதறும்

உன்
சிரிப்பினில் சிதறும்
சில்லறைகளுக்கு
உண்டா இல்லையா
வரி விலக்கு?
-Boo

எச்சில் தொட்டு

எச்சில் தொட்டு
ஒட்ட வைக்காதே
எந்த அஞ்சல் தலைகளையும்.

உன் இதழ் தொடும்
அந்த தூரத்தில்
மகாத்மாவாய் இருந்தாலும்
மன்னிக்க மறுக்கிறது
மனது.
-Boo