Tuesday, July 6, 2010

தென்றலில் மயிலிறகுபோல்

தென்றலில் மயிலிறகுபோல்
அசைகிறாய்

என்னை தொட்டுவிடாமல்
உரசிச்செல்லும்
உன் மூக்கின் நுனி

என் வியர்வை துளிகளை
எரித்துக்கொண்டிருக்கும்
உன் மூச்சின் வெப்பம்

உன்னில் உதித்து
என்னில் கடந்து
உன்னிலே முடியும்
இரத்த ஓட்டம்

மங்கி எரியும்
விளக்குகள் நிறைந்த தெருவின்
அமைதியை
சன்னமாக கலைக்கும்
உன் சிணுங்கல்

உன்னில் தொலைத்துக்கொண்டிருக்கிறேன்
என் தனிமை இரவுகளை!!!

Monday, June 7, 2010

நம் முதல் சந்திப்பில்

நம் முதல் சந்திப்பில்
மௌனத்தை மட்டுமே
பரிமாறிக்கொண்டதாய்
நினைத்திருந்தோம்

எனது நினைவுகளுக்கு
எட்டாதபடி
உனது வார்த்தைகள்
என் இதயத்தில்
தந்தியடித்துக்கொண்டிருந்தது
-Boo

Friday, June 4, 2010

புடவை வாங்க

புடவை வாங்க
போனதாய் சொன்னாய்
கடைக்காரன் கண்டிப்பாய்
ஆச்சர்யப்பட்டிருக்க வேண்டும்!
பட்டுப்புடவை கடையில்
வண்ணத்துப்பூச்சி!
-Boo

உன் சிரிப்பினில் சிதறும்

உன்
சிரிப்பினில் சிதறும்
சில்லறைகளுக்கு
உண்டா இல்லையா
வரி விலக்கு?
-Boo

எச்சில் தொட்டு

எச்சில் தொட்டு
ஒட்ட வைக்காதே
எந்த அஞ்சல் தலைகளையும்.

உன் இதழ் தொடும்
அந்த தூரத்தில்
மகாத்மாவாய் இருந்தாலும்
மன்னிக்க மறுக்கிறது
மனது.
-Boo

உன் உயிர் சுமந்து வரும்

உன்
உயிர் சுமந்து வரும் கடிதங்களின்
கண்ணீர் கறை படிந்த பக்கங்களில்
நீ எழுதி முடிக்காத
மௌன வார்த்தைகளின்
அர்த்தங்களை மொழிபெயர்த்துக்கொண்டு
நமக்கிடையேயான தூரத்தினை
காற்றினிலேறி கடந்துகொண்டிருக்கிறேன் ...

தென்றலால் உன் கண்ணீர் துடைக்க
மௌவ்வல்கள் முத்தங்களோடு
மாலையில் மலரும்.

அதுவரை காத்திரு...

-Boo

Sunday, May 23, 2010

மொட்டவிழ்க்காத மலர்கள்

மொட்டவிழ்க்காத மலர்கள்
சேமித்து வைக்கின்றன
வாசனையை...

பொழிந்திடாத மேகம்
சேமித்து வைக்கிறது
முதல் மழைத்துளியை...

வெள்ளை குளிர்காலம்
சேமித்து வைக்கிறது
வசந்தத்தின் வண்ணங்களை...

தூரிகைகள்
சேமித்து வைக்கின்றன
அழகான ஓவியங்களை...

வாசனையும் மழைத்துளியும்
வண்ணங்களும் ஓவியமும்
பிறக்கும் நொடிகள்
சேமித்து வைத்திருக்கின்றன
முதல் குழந்தை பெற்றெடுக்கும்
தாயின் சந்தோசங்களை....

அதுபோல்
என் முதல் முத்தமும்....
-Boo