Friday, June 4, 2010

உன் உயிர் சுமந்து வரும்

உன்
உயிர் சுமந்து வரும் கடிதங்களின்
கண்ணீர் கறை படிந்த பக்கங்களில்
நீ எழுதி முடிக்காத
மௌன வார்த்தைகளின்
அர்த்தங்களை மொழிபெயர்த்துக்கொண்டு
நமக்கிடையேயான தூரத்தினை
காற்றினிலேறி கடந்துகொண்டிருக்கிறேன் ...

தென்றலால் உன் கண்ணீர் துடைக்க
மௌவ்வல்கள் முத்தங்களோடு
மாலையில் மலரும்.

அதுவரை காத்திரு...

-Boo

Sunday, May 23, 2010

மொட்டவிழ்க்காத மலர்கள்

மொட்டவிழ்க்காத மலர்கள்
சேமித்து வைக்கின்றன
வாசனையை...

பொழிந்திடாத மேகம்
சேமித்து வைக்கிறது
முதல் மழைத்துளியை...

வெள்ளை குளிர்காலம்
சேமித்து வைக்கிறது
வசந்தத்தின் வண்ணங்களை...

தூரிகைகள்
சேமித்து வைக்கின்றன
அழகான ஓவியங்களை...

வாசனையும் மழைத்துளியும்
வண்ணங்களும் ஓவியமும்
பிறக்கும் நொடிகள்
சேமித்து வைத்திருக்கின்றன
முதல் குழந்தை பெற்றெடுக்கும்
தாயின் சந்தோசங்களை....

அதுபோல்
என் முதல் முத்தமும்....
-Boo

Sunday, August 23, 2009

ஒற்றை நொடிதான் வித்யாசம்

ஒற்றை நொடிதான் வித்யாசம்
என்றாலும்,
எனதருகில் நிற்கிறவன் கைகளில்
வெற்றிகனி.
என் கண்களில்
தோல்வியின் கண்ணீர்.

-Boo

Tuesday, August 11, 2009

நீண்டும் ஒடிந்தும்

நீண்டும் ஒடிந்தும்
சேர்ந்தும் பிரிந்தும்
வளைந்தும் நெளிந்தும்
நின்றும் கிடந்தும்
திரிந்தும் பிணைந்தும்
கிடக்கும்
ஒற்றையடிப் பாதைகள் போன்ற
உன் உள்ளங்கை ரேகைகள் மீது
என் விரல்களால்
ஊர்ந்து கொண்டே இருக்கிறேன்

தயவு செய்து
என்னைத் தொலைத்துவிடு
நான்
வீடு போய்ச் சேரவேண்டும்...

-Boo

Saturday, August 1, 2009

உன் வீட்டுக்கு வழி

உன் வீட்டுக்கு
வழி எது என்று கேட்டேன்

போகும் வழியெல்லாம்
புன்னகை
உதிர்த்துவிட்டுப் போகிறேன்
தொடர்ந்து வா
என்கிறாய்

-Boo

Friday, July 31, 2009

உடைந்து உருவிழந்து

உடைந்து
உருவிழந்து
உன்னைத் தழுவி
மோட்சம் பெறுவதற்காய்
உனதிலைகளின் மீது
விழுந்த என்னை

நீ
வளைந்து
நிலம் நோக்கி
வீழச்செய்தாய்..

இந்த மழைத்துளி
இலைகளின் மேல்
தவம் செய்ய
வரம் வாங்கி
வரவில்லை போலும்
என்றெண்ணி

கண்ணீர் மல்கி
மண்ணைச் சேர்ந்து
நான் மரணிக்கும் போது
உன் வேர்களால்
எனைத் தீண்டி
என் உயிர் மீட்டாய்.

இலைகளில்
வாழ்வதல்ல;
உயிரின்
வேர்களில் வீழ்வதே காதல்
என்றுரைத்தாய்.

நீ என் காதலி!

-Boo

Tuesday, May 5, 2009

இரவுகளில் குளிர்காயும்போது

இரவுகளில்
குளிர்காயும்போது
நாமிருவரும்
சேர்ந்தே எரிவோம்...

நீ
விழிமூடி இருக்கும்
பொழுதுகளன்றி
எனை
கூறிய அம்புகளால்
எந்நேரமும் துளைத்து
காயம் செய்துகொண்டிருக்கும்
தருணங்களிலும்...

நெருப்பின்
நாக்குகளைப்போல்
உன் இருள் கூந்தலால்
என் முழுமையும்
தொட்டு...தொடர்ந்து...

உன்
விரல் தீண்டும்
ஸ்பரிசங்களால்
என்
உயிர்த் தொலையும்
கானல் நொடிகளிலும்...

காற்றினை மரிக்கும்
இடைவெளியின் நெருக்கத்தில்
குளிர்காயும் பொழுதுகளிலும்...

நாமிருவரும்
சேர்ந்தே எரிவோம்...

-Boo