Tuesday, May 5, 2009

இரவுகளில் குளிர்காயும்போது

இரவுகளில்
குளிர்காயும்போது
நாமிருவரும்
சேர்ந்தே எரிவோம்...

நீ
விழிமூடி இருக்கும்
பொழுதுகளன்றி
எனை
கூறிய அம்புகளால்
எந்நேரமும் துளைத்து
காயம் செய்துகொண்டிருக்கும்
தருணங்களிலும்...

நெருப்பின்
நாக்குகளைப்போல்
உன் இருள் கூந்தலால்
என் முழுமையும்
தொட்டு...தொடர்ந்து...

உன்
விரல் தீண்டும்
ஸ்பரிசங்களால்
என்
உயிர்த் தொலையும்
கானல் நொடிகளிலும்...

காற்றினை மரிக்கும்
இடைவெளியின் நெருக்கத்தில்
குளிர்காயும் பொழுதுகளிலும்...

நாமிருவரும்
சேர்ந்தே எரிவோம்...

-Boo

Monday, April 20, 2009

உயிர்க்கும் துளிர்களை

உயிர்க்கும் துளிர்களை
வசந்தத்திற்க்காய்
ஒளித்து வைத்திருக்கின்றன
குளிர்கால மரங்கள்...

எனது
சொல்லப்படாத வார்த்தைகளும்
உன் மௌனத்தை
கலைப்பதற்க்காய்
கண்களில் நீரோடு
உனைப்போலவே
மௌனித்திருக்கிறது...

இவை
மழைத்துளிகளன்று
மண்ணோடு சேர்வதற்கு.
கண்ணீர்த்துளிகள்.
மண்ணைச் சேரும் முன்னே
காற்றோடு கரைந்து விடுகின்றன...

மரங்களுக்கு
வசந்தங்கள் நிச்சயம்

நீ பேசிடாத
உன் மௌனம் கலைக்க
வசந்தத்தின் தளிர்களாவது
மிக மெதுவாக
வீசட்டும்.

-Boo

Thursday, April 16, 2009

செக்கச் செவேல்

செக்கச் செவேல் செம்மண் பூமியில
பச்சைப் பசேல் வயக்காடு...

அயிர மீனுங்க
அலைஞ்சி திரியிற
வாய்க்கா வரப்பு...

கரும்புத் தட்டைய மேயிர
வெள்ளாட்டுக்கூட்டம்...

குஞ்சுங்கள அணைச்சிக்கிட்டு போற
கோழிங்க கூட்டம்
அதுங்கள அணைச்சிக்கிட்டு போற
சேவக்கூட்டம்...

மழைத்தண்ணி சொட்டுற
ஓலைக்குடிசை திண்ணையில
வெத்தல இடிச்சிக்கிட்டு
பொக்கைவாய் கிழவி...

ஆத்து மணல்ல
மச்சி வீடு கட்டி வெளையாடுற
ஊளை மூக்கு பொண்ணுங்க...

தூரத்து ரயில
தண்டவாளத்துல
காத வச்சி கேக்குற
ஓட்டை டவுசர் பசங்க ...

சமைஞ்சாலும்
கட்டங்கட்டி
பாண்டி விளையாட மறக்காத
தாவணிப் பொண்ணுங்க....

அத்தனையும் பாத்துட்டு
ஆச்சர்யமா கேட்டான்
என் பட்டணத்து சிநேகிதன்

எங்க இருந்துடா
டவுன்லோடு பண்ணுன
இத்தன அழகான ஸ்க்ரீன் சேவருங்களை???

-Boo

Thursday, November 6, 2008

மேகம் நீங்கிய மழைத்துளி

மேகம் நீங்கிய
மழைத்துளி ஒன்று
பயணிக்கிறது
செம்புலம் நோக்கி

திசைகளற்ற பயணம்
இன்னும் நீட்டிக்கிறது
தூரத்தின் நீளத்தை

அலைக்கழிக்கும் காற்று
கேள்விக்குறிகளாக்குகிறது
சென்று சேர்வதற்கான
மழைத்துளியின்
நம்பிக்கையை

தனிமையின் துயரம்...
விரக்தியின் விளிம்பில்
கண்ணீர் சிந்துகிறது
மழைத்துளி

கண்ணீர்த்துளி
மழைத்துளியின்
சுயத்தின்
பிரதிபலிப்பு

இப்போது
மழைத்துளிக்கு
ஆதரவாய்
கண்ணீர்த்துளி

தனிமை தொலைந்த பயணம்
தூரத்தின் நீளத்தை
அர்த்தமற்றதாக்குகிறது

துளிகளில்
துளிர்க்கிறது
நம்பிக்கை
தூரத்தில் தெரிகிறது
செம்புலம்.
-Boo

Monday, November 3, 2008

வனவாசம்

பகல் முழுதும் அலைந்து திரிந்து
இரவு தாமதித்து வீடு சேர்ந்தனர்
ராமனும், லக்ஷ்மனும், சீதா தேவியும்.

களைப்பின் மிகுதியில் ராமன்
கயிற்றுக்கட்டிலில் சயநித்திருக்க...

அரிசி களைந்து
அடுப்பில் இட்டுக்கொண்டிருந்த
சீதாவின் கண்களில் புகைக்கண்ணீர்.

இன்றைய வருமானம்
இந்த வாரத்தின் மிகக் குறைவென
மழையையும் ராமனையும்
அலுத்துக்கொண்டிருந்தான்
லக்ஷ்மணன்.

உதவும் அணில்கள் அற்ற
கடற்கரை சேரியின் உப்புக்காற்றில்
நைந்துபோன கட்டிலின் நைலான் கயிறு,
காலையில் பூசிய நீல வர்ணத்தை அழித்து,
நாளை பற்றிய கவலைகளோடு
தூங்கிக் கொண்டிருந்த ராமனின் முதுகில்
கோடு கிழித்துக்கொண்டிருந்தது...

-Boo

Friday, September 12, 2008

என்னவள் சமைக்கிறாள்

என்னவள் சமைக்கிறாள்.
வெளியே மழை.
இரண்டிலும்
மண் வாசனை.
-Boo

Thursday, August 28, 2008

சுட்டெரிக்கும் வெய்யில்

சுட்டெரிக்கும் வெய்யில்
முகத்திலறையும் புழுதிக்காற்று
பழகிவிட்ட வியர்வை வாசனை
பக்கத்து டீக்கடையின்
குத்துப்பாடல்
சுவரோர எச்சில் கறைகள்
காதல் கிறுக்கல்கள்
லேகிய வியாபாரிகள்
காய்கறி கூடைகள்
புத்தகச்சுமைகள்
பரீட்சை பயங்கள்
கடிகார கேள்விகள்
இன்டர்வியு அவசரங்கள்
வழித்தட விசாரணைகள்
விழிப்பரிமாற்றங்கள்
குழந்தைகள் தொலைத்துவிட்ட
ரூபாய் நாணயங்கள்
திருட்டுப்போன சம்பள கவர்கள்...
சுவாரஸ்யமாகத்தான் உள்ளன
நகரப் பேருந்திற்கான
காத்திருப்புகள்...
-Boo