Monday, August 11, 2008

தலையணை நனைய

தலையணை நனைய
முகம் பொத்தி
இரவு முழுக்க
அழுத கண்ணீர்
இன்னும் கரித்துக்கொண்டிருக்கிறது
நினைவுகளாய்...

அத்தனை அழுதும்
அடம்பிடித்தும்
அப்பாவிடமிருந்து
பணம் கிடைக்கவில்லை
பேனா வாங்க.

சின்னு வாங்கின பேனாவை
ஆசையாய் வாங்கி
கணக்கு நோட்டில்
முதன்முதலாய் கிறுக்கினபோது
உணர்ந்த அழுத்தம்
ஸ்பரிசித்துக் கொண்டிருந்தது
விரல்களினூடே.

வெள்ளிக்கிழமை
வாங்கித்தருவதாய்
இப்பவும் சொல்லிக்கொண்டிருக்கிறார் அப்பா.
இன்னும் மூன்று நாட்கள்.

வகுப்பில் எல்லோரும்
பேனா வாங்கிவிட
என் விரல்கள் மட்டும்
பென்சில் பிடித்து
வீட்டுப்பாடம் எழுத
மறுத்துக்கொண்டிருந்தன.

வியாழக்கிழமை இரவு
தாமதித்து வீடு வந்த
அப்பாவின் முகத்தில்
படர்ந்திருந்த வெறுமை
எனைப் பார்த்து
இன்றும்
பேனா வாங்க மறந்ததாய்
மௌனித்து நின்றது.

எதுவும் பேசாமல்
தலையணையில்
முகம் பொத்தி
அழுத கண்ணீர் இன்னும்...

காலையில்
வீட்டுப்பாடம் எழுத
பென்சில் தேடியபோது
என் கண்ணிர்க் கறை படிந்த
கன்னங்கள் பார்த்து
பரிகசித்து
சிரித்துக்கொண்டிருந்தது,
ஒரு நாள் இரவு முழுதும்
என்னை அழவைத்த
எனதே எனதான
புதிய பேனா!
அருகில்
புன்னகையுடன் அப்பா!!!

பேனாவில்
மை நிரப்பிகொடுத்த
அப்பாவிடம்
அதே கணக்கு நோட்டில்
மென்மையாய்
அவரின் பெயரை
எழுதிக்காண்பித்துவிட்டு

வெள்ளை சட்டைப்பையில்
புதிய பேனாவை
வைத்துக்கொண்டு
வகுப்பில்
அத்தனை பேரிடமும்
காட்டியே தீரவேண்டிய ஆவலில்
மூச்சிரைக்க ஓடி வந்து
பள்ளி நுழைகையில்

இதயத்துடிப்பை
சில கணங்கள் நிறுத்தி,
என் வெள்ளை சட்டையில்
மை கறையை மட்டும் விட்டுவிட்டு
எங்கேயோ மறைந்துபோன
எனதருமை பேனாவை
இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன்...

-Boo

Sunday, August 10, 2008

கடிதங்கள்

பிள்ளையார் சுழிகள்
சிவமயங்கள்
முனை சந்தனங்கள்
முத்தக்கறைகள்
மைத்தீற்றல்கள்
கண்ணீர் தடையங்கள்
கைரேகைகள்
அடித்தல் திருத்தல்கள்
எச்சில் நனைத்த
அஞ்சல் தலைகள்
அத்தனையும் இழந்து
இறந்துபோய் வருகின்றன
இன்றைய இ-மெயில்கள்.
-Boo

Saturday, August 2, 2008

நீயும் நானும்

வெள்ளிக்கிழமை
கோவில் வாசலில்
மாநிறமாய்
சுருள்க்கூந்தலுடன்
மஞ்சள் புடவையில்
உயரமாய் உனது ஒரு அம்மா...

சனிக்கிழமை
காய்கறிக்கடையோரம்
சற்றே பருமனாய்
பெரிய கண்களுடன்
அழுக்கேறிய சிவப்பு புடவையில்
உனது இன்னொரு அம்மா...

ஞாயிறு மாலையில்
கடற்கரையில்
ஒடிசலாய்
குளிர்க்காற்றில் இருமியபடி
மங்கிய கண்களுடன்
வேறொரு அம்மா...

உனது
அத்தனை அம்மாக்களுடனும்
பசியில்
அழுது ஓய்ந்த
கண்ணீர்க்கண்களுடன் நீ...

எனது
கருணை நாணயங்கள்
உன் பசியையும் கண்ணீரையும்
ஒருபோதும்
போக்கப்போவதில்லை என்றறிந்தும்
உனது அம்மாக்களின் தட்டில்
இரண்டு ரூபாய் வீதம்
உனக்காக
ஆறு ரூபாய் இழந்திருக்கும் நான்...

-Boo

Thursday, July 17, 2008

பூனைபோல்

பூனைபோல்
சப்தமற்று
மிக மெதுவாக
என்னில்
கால் பதிக்கிறது
காமம்.

ஆர்ப்பரிக்கும்
கடலலைபோல்,
காமத்தின் கால்தடங்களை
கண நேரமும்
விட்டு வைப்பதில்லை
காதல்!

தோற்றுப்போன காமம்
கரைந்து போன
கால் தடங்களை
விட்டுவிட்டு
கடலில்
கண்ணீர்த் துளிகளை
கலந்துவிட்டுச் சென்றது.
-Boo

Wednesday, July 9, 2008

நிழல் மண்டிக்கிடக்கிறது

நிழல் மண்டிக்கிடக்கிறது.

இலையுதிர்காலத்தில் இலைகளும்,
வசந்தகாலத்தில் பூக்களும்,
வருடம் ஒருமுறை
சிவப்பு ரோஜாக்களுமாய்,

கடந்துசெல்லும் போதெல்லாம்
வாழ்வின் வெறுமையை
அமைதியாக வாசித்துக்கொண்டிருக்கின்றன,

பெயர் பொறித்த கல்லில்
சுய அறிமுகம் செய்துகொள்ளும்
முகம் தெரியாத
கல்லறைகள்.

-Boo

Saturday, July 5, 2008

எனது கேள்விக்கும்

எனது கேள்விக்கும்
உனது பதிலுக்குமான
நீண்ட
மௌனத்தின் பாதையில்
திசைகளற்று
பயணிக்கிறேன்.

எனது
குறுகி நீளும் நிழல்
மறையும் முன்னே
நமை கடந்து சென்ற
மேகம் தூவிய
தூரலில் நனைந்த
உன் இதழ் கொண்டு
குளிர் வார்த்தைகள் தூவி
எனை வரவேற்பாயா?

-Boo

Sunday, June 29, 2008

இரவில்...

இரவில்
விளக்குகள் அணைத்தபின்
உன் பெயரின்
முதலெழுத்து மட்டும் தெரிய
வருகிறது
தொலைபேசி அழைப்பு...

வழக்கம்போல்
இரவின் நீளத்தை
நீட்டிக்கச்சொல்லி
கடிகாரத்திடம் கண்ணசைத்து

அதுவரை
சேமித்துவைத்த
தனிமையை கலைத்துவிட்டு
பேசத்தொடங்குகிறேன்...

உன்
இதழ் மலரும்
வார்த்தைகளை
கேட்காமல்
அதிகநேரம்
இருக்க முடிவதில்லை
அதனால்
அதிகபட்சம்
ஐந்து வார்த்தைகளுக்குள்
பேசி முடித்து
உன் பதிலுக்காக
காத்துக் கிடக்கிறேன்..

உன்
தனிமையும் தூக்கமும்
கலையாதிருக்க
என் வார்த்தைகளில்
அதிகம்
மெல்லினம் கலக்கிறேன்

பல சமயங்களில்
உனது மௌனம் மட்டுமே
உரையாடிக்கொண்டிருக்கிறது
என்னுடைய மெல்லினங்களுடன்...

நம்
காதலை சொல்லும் வார்த்தைகளை
நான் சேமிப்பதே இல்லை.
நீயோ
செலவழிப்பதே இல்லை.

இரவு கடந்து
காலை நெருங்கும்போது
நான்
தீர்ந்து போன
சொற்களோடு
உனக்காக காத்திருக்கிறேன்

கடிகாரம்
எனக்காக
இரண்டு நொடிக்கு ஒருமுறை
நகர்கிறது...

ஒரு
நீண்ட மௌனத்தின்
இடைவெளியில்
விடிகிறது
உன் வெட்கம் தோய்ந்த வார்த்தைகள்.

என் வாழ்வின்
அர்த்தத்தை
மூன்றே வார்த்தைகளில்
மொழி பெயர்க்கிறாய்
நானும் புன்னகையுடன் பதில்கிறேன்
"ஆமாம்...நானும்...."
-Boo