Monday, August 11, 2008

தலையணை நனைய

தலையணை நனைய
முகம் பொத்தி
இரவு முழுக்க
அழுத கண்ணீர்
இன்னும் கரித்துக்கொண்டிருக்கிறது
நினைவுகளாய்...

அத்தனை அழுதும்
அடம்பிடித்தும்
அப்பாவிடமிருந்து
பணம் கிடைக்கவில்லை
பேனா வாங்க.

சின்னு வாங்கின பேனாவை
ஆசையாய் வாங்கி
கணக்கு நோட்டில்
முதன்முதலாய் கிறுக்கினபோது
உணர்ந்த அழுத்தம்
ஸ்பரிசித்துக் கொண்டிருந்தது
விரல்களினூடே.

வெள்ளிக்கிழமை
வாங்கித்தருவதாய்
இப்பவும் சொல்லிக்கொண்டிருக்கிறார் அப்பா.
இன்னும் மூன்று நாட்கள்.

வகுப்பில் எல்லோரும்
பேனா வாங்கிவிட
என் விரல்கள் மட்டும்
பென்சில் பிடித்து
வீட்டுப்பாடம் எழுத
மறுத்துக்கொண்டிருந்தன.

வியாழக்கிழமை இரவு
தாமதித்து வீடு வந்த
அப்பாவின் முகத்தில்
படர்ந்திருந்த வெறுமை
எனைப் பார்த்து
இன்றும்
பேனா வாங்க மறந்ததாய்
மௌனித்து நின்றது.

எதுவும் பேசாமல்
தலையணையில்
முகம் பொத்தி
அழுத கண்ணீர் இன்னும்...

காலையில்
வீட்டுப்பாடம் எழுத
பென்சில் தேடியபோது
என் கண்ணிர்க் கறை படிந்த
கன்னங்கள் பார்த்து
பரிகசித்து
சிரித்துக்கொண்டிருந்தது,
ஒரு நாள் இரவு முழுதும்
என்னை அழவைத்த
எனதே எனதான
புதிய பேனா!
அருகில்
புன்னகையுடன் அப்பா!!!

பேனாவில்
மை நிரப்பிகொடுத்த
அப்பாவிடம்
அதே கணக்கு நோட்டில்
மென்மையாய்
அவரின் பெயரை
எழுதிக்காண்பித்துவிட்டு

வெள்ளை சட்டைப்பையில்
புதிய பேனாவை
வைத்துக்கொண்டு
வகுப்பில்
அத்தனை பேரிடமும்
காட்டியே தீரவேண்டிய ஆவலில்
மூச்சிரைக்க ஓடி வந்து
பள்ளி நுழைகையில்

இதயத்துடிப்பை
சில கணங்கள் நிறுத்தி,
என் வெள்ளை சட்டையில்
மை கறையை மட்டும் விட்டுவிட்டு
எங்கேயோ மறைந்துபோன
எனதருமை பேனாவை
இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன்...

-Boo

2 comments:

ragu said...

Good One, But it seems like a short story.Try to cut the length.
otherwise a good one, provokes the old thoughts

rpras said...

nice boopathi...but i'm echoing ragu's comments..if the length is short it would have been more interesting..