Tuesday, June 26, 2012

ரணம்

உறவுப் பின்னலில் 
ஒற்றை இழைகள்!
சாயம் போனதுபற்றி
கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன்,
அறுந்துபோனது தெரியாமல். :(

-Boo 

Friday, April 20, 2012

பிரிவாற்றாமை

நீ ஒன்றும்
பெரிதாய் சாதித்துவிடவில்லை
என் நெஞ்சில் கொஞ்சம் வலியும்,
என் கண்களில்
துளி கண்ணீரும் வரவழைத்தது தவிர.

உன்னுடன்
என் சின்னஞ்சிறு
புன்னகை மட்டும்தானே சென்றது?
நான் இன்னும் வாழ்ந்துகொண்டுதான்  இருக்கிறேன்!

இப்பொழுதெல்லாம்
யோசிக்க நிறைய நேரம் கிடைகிறது
மிகுந்திருக்கும் பொழுதுகளை என்ன செய்வதென்று.

அலுவலகம் செல்லும்முன்
அத்தனை முறை
கையசைத்து, முத்தங்கள் அனுப்பி,
உன்னைப்போல் யாரும்
என் நேரத்தை வீணடிப்பதில்லை.

மணிக்கொருதரம்
உன் செல்லப் பெயர் காட்டி அழைக்கும் தொலைபேசி 
இப்பொழுதெல்லாம் தொந்தரவின்றி துயில்கிறது.

நம் பிரிவின் கடைசி நொடியில்
நாம் இன்னும் இரண்டு வார்த்தைகள் 
அதிகம் பேசி இருக்கலாமோ?
அந்த நேரத்திலா
வார்த்தைகள் தொலைந்து போக வேண்டும்?

என் சட்டையில் உன் முத்தச்சாயம்,
என் மார்பில் உன் கீறல் கிறுக்கல்கள்,
இப்படி எதையுமே சேமிக்காமல்
உன் நினைவுகளோடு மட்டுமே
வாழும் என்னை,கண்ணே....
மீண்டும் எப்போது வந்து உயிர்த்தெழுப்புவாய்?
-Boo

Wednesday, February 1, 2012

கடைசியாக ஒருமுறை

கடைசியாக ஒருமுறை
கடற்கரையில் சந்தித்துவிட்டு
நிரந்தரமாக பிரிவதென்று தீர்மானித்தோம்.

நிலவுமற்ற இருளில்
ஈரமில்லா மணலில்
முகம் சுழிக்காத இடைவெளியில் அமர்ந்தோம்.

நம்முடன் சேர்ந்து
அலைகளும் அமைதியாக இருந்தன.

நான் பேச எத்தனித்த
மௌனத்திற்கு மிக அருகேயான
முதல் வார்த்தை
காற்றில் கரைந்து போயிற்று.

அதுவரை அமைதியாக இருந்த அலை
நீ பேச ஆரம்பித்தபோது
ஆர்ப்பரித்து அடங்கியது.

மௌனத்தின் விளிம்பில்
தடுமாறிய வார்த்தைகள்
நம் உறவின் எஞ்சிய ஈரத்தில்
நம்மை நனைத்துக்கொண்டிருந்தன.

பிரிவின்
முதல் புள்ளியில்
புரிதலும் தொடங்கியது.

மிக நெருக்கமான கால்த்தடங்களை
கரையில் விட்டுவிட்டு,
ஒரே குடையில் நடக்க ஆரம்பித்தோம்.

மழை தொடங்கியது.
-Boo

வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறேன்...

வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறேன்...
நீ இல்லாத வெற்றிடத்தினை
என் கண்ணீரால் நிரப்பிக்கொண்டு.
-Boo

Saturday, April 2, 2011

காதலைப்பற்றி...

உன்னைப் பற்றி
கவிதைகள் எதுவும்
எழுதுவதாய் இல்லை
உன்னை காதலிக்கும் வரை
 
உன் கோபங்கள்
என்னை சலனப்படுத்தவில்லை
உன்னை காதலிக்கும் வரை
 
உன் சிரிப்பு
என்னை சந்தோஷிக்கவில்லை
உன்னை காதலிக்கும் வரை
 
உன் வருகையை
நான் எதிர்பார்த்திருக்கவில்லை
உன்னை காதலிக்கும் வரை
 
உன் முத்தங்கள்
எனக்குள் தீ மூட்டவில்லை
உன்னை காதலிக்கும் வரை
 
உன் மோகத்தில்
அமிழ்ந்து புதைந்துவிடவில்லை
உன்னை காதலிக்கும் வரை
 
உன் கூந்தல் அலையில்
மூச்சுத்திணரவில்லை
உன்னை காதலிக்கும் வரை
 
உன் இதழ் ஈரத்தை
ரசித்ததில்லை
உன்னை காதலிக்கும் வரை
 
உன் உப்பிட்ட சமையலை
ருசித்ததில்லை
உன்னை காதலிக்கும் வரை
 
உன் தொடுதலில்
நான் தொலைந்ததில்லை
உன்னை காதலிக்கும் வரை
 
உன் ரேகைகளின் வழியாக
பயணித்ததில்லை
உன்னை காதலிக்கும் வரை
 
உனக்காய்
என் நேரத்தை சேமித்ததில்லை
உன்னை காதலிக்கும் வரை
 
உன் துயரம்
என்னை அழவைத்ததில்லை
உன்னை காதலிக்கும் வரை
 
இன்னும்
எத்தனை எத்தனையோ...
 
நாம்
முட்களை களைந்து
பூக்களை பறித்துக் கொண்டிருக்கிறோம்
 
கீறல்களை மறைத்து
காதல் மலர்கின்றது
 
அந்த
இனிய வாசத்துடன்
காதலே...
உனக்கு
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

-Boo

Sunday, December 19, 2010

மின்சார ரயிலின்

மின்சார ரயிலின்
காலைக் கூட்ட நெரிசலில்
வெண்கலக் குரல் பாடலும்
சில்லறைகள் குலுங்கும் தட்டும்
எனது ஒரு ரூபாயை
எடுக்கத் தீர்மானிப்பதர்க்குள்
கடந்து சென்று விடுகின்றன.

என் பாழும் மனது
அன்று முழுவதும்
அந்தப் பாடலை
பாடிக்கொண்டிருக்கிறது,
சில்லறை சத்தத்துடன்.
-Boo

தனிமை

பிடித்துக்கொள்ள
மனிதர்கள் இல்லாமல்
அலைந்துகொண்டிருக்கின்றன
பின்னிரவின்
மின்சார ரயிலில்
தொங்கும்
கைப்பிடிகள்.
-Boo